என்னை கவனிப்பவர்கள்

சனி, 23 செப்டம்பர், 2023

பிரிந்த நாள் வாழ்த்துகள்

வலைப்பக்கம் வந்து நீண்ட நாட்களாயிற்று. வலைப்பூக்கள் முன்பு போல கலகலப்பாஅ இல்லையென்றாலும் விட மனமில்லை. 
கடந்த ஆண்டு ஒரு சிறுகதைப்போட்டிக்கு அனுப்பிய (
அங்கு தேர்வாகவில்லை)  கதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 


பிரிந்த நாள் வாழ்த்துகள்

--டி.என்.முரளிதரன்---

ஞாயிற்றுக் கிழமை சாவகாசமாக எழுந்தேன். லேப்டாப்பில் எனது அலுவலக வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு எனது பெர்சனல் மெயில் ஓபன் செய்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரியா மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். 'ரமேஷ்! விட்டு விடுதலையாகிவிட்டேன்......” என்று தொடங்கிய மின்னஞ்சலை மேலும் படிக்க முடியாமல் சற்றே திகைத்து கணினித் திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
காஃபி கொண்டு வந்த என் மனைவி சசியையும் கவனிக்காமல் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபடாமல் இருந்தேன்.
”ரமேஷ்! என்ன ஆச்சு?” என்றவள் பக்கதில் உட்கார்ந்து மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதை மட்டும் படித்தாள்.
”யாரு பிரியா உங்க எக்ஸ் ஆளா என்றவள்”

என் முகபாவத்தைக் கண்டு ”சாரி,சாரி சும்மா ஜோக்தான். நீ அதுக்கெல்லாம் லாயக்கில்லன்னு எனக்கு தெரியாதா? ஏன் இவ்வளவு சீரியஸ் ரமேஷ். நான் தெரிஞ்சுக்கலாமா? சொல்லக்கூடாத விஷயமா இருந்தா வேணாம்”

“ அதெல்லாம் இல்ல சசி. பிரியா என்னோட காலேஜ்மேட். கார்த்திக்கும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரே ஸ்கூல்ல படிச்சோம். ஒரே காலேஜ்ல சேந்தோம். கார்த்திக் ரொம்ப இண்டலிஜெண்ட். ஆளும் பாக்கறதுக்கு ஹீரோ மாதிரி இருப்பான். நானும் கார்த்திக்கும் இஞ்சினியரிங்la கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தோம். அப்போ எங்க கிளாஸ்ல சேர்ந்தவதான் பிரியா. பிரியா அழகான பொண்ணு மட்டுமில்ல. எக்ஸ்டார்டினரி டேலண்ட் இருக்கவ. அகடமிக், கல்சுரல்ஸ் காம்படிஷன்ஸ்ல் அவதான் எப்பவுமே டாப். கார்த்திக்குக்கு பிரியாவை ரொம்ப பிடிச்சிப் போச்சு. லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். பிரியாகிட்ட பிரபோஸ் பண்ண ட்ரை பண்ணான். ஆனா அவ பிடி கொடுக்கல. அவன் என் கிட்ட புலம்பிகிட்டே இருப்பான். அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேண்.அவ கிடைக்கலன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்னு. அப்ப காதலை தெய்வீகமா நினைச்ச காலம். நண்பர்களோட காதலுக்கு உதவறதுதான் பிறவிப் பயன்னு நினச்சோம்”

”அந்தக் கால விவேக், சின்னி ஜெயந்த், சார்லி போலவா?” சிரித்தாள் சசி

“நக்கலா” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான் ரமேஷ்

”நான் கொஞ்சம் கதை, கவிதை எல்லாம் எழுதுவேன். காலேஜ் கல்சுரல்ஸ்ல நானும் பிரியாவும் கலந்துக்குவோம். பிரியா என்கிட்ட நல்ல நட்போட இருந்தா. நான் சொன்னா அவ கேப்பான்னு கார்த்திக் நினச்சான். அதனால என்ன பேசச் சொன்னான். அவனைப் பாத்தா பாவமா இருந்தது. அவன் காதல் அப்ப எனக்கு உண்மையா தெரிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் எல்லாவிதத்திலும் பொருத்தமான ஜோடியாவும் இருந்தாங்க. சமயம் கிடைக்கும் போதெல்லாம் கார்த்திக்கோட காதலைச் சொன்னேன். ஆனா அவ, காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்லை; நல்ல ஸ்டேட்டசுக்கு வரணும்கிற இலட்சியம்தான் முக்கியம்னு சொன்னா. காதலால உன் லட்சியம் பாதிக்காது, அவன் உனக்கு நிச்சயம் துணையா இருப்பான்னு நான் சொன்னேன்

“ஒருமுறை பிரியாவை கிண்டல் பண்ண ஒரு பையனை அவள் முன்னால் அடித்துத் துவைத்தான். தனக்காக அவன் சண்டை போட்டது எல்லா பொண்ணுங்களப் போல அவளுக்கும் பிடிச்சிருந்தது”

“ஒஹோ! எல்லாப் பொண்ணுங்களோட மனசும் உங்களுக்கு தெரியும் போல. ஒரு படத்துல விவேக் மாதிரி பஸ் ஸ்டாண்ட், கோவில்னு போயி பொண்ணுங்க மனசு பத்தி ஆராய்ச்சி பண்ணியா”

நான் எரிச்சலுடன் பார்க்க

”ஒகே ஓகே கண்டினியு "

”அவனோட நாலெட்ஜ் பிரியாவை பிரமிக்க வச்சது. கொஞ்சம் கொஞ்சமா அவ மனசு மாறினா. கார்த்திக்கோட கடைக்கண் பார்வைக்காக நிறையப் பொண்ணுங்க காத்திருத்தாங்க. ஆனா அவங்களையெல்லாம் அவன் கண்டுக்காதது பிரியாவுக்கு பெருமையா இருந்தது”

“இப்படித்தானே உறுதியான பெண்களையும் காலம் காலமா ஏமாத்திக்கிட்டிருக்கீங்க. சரி அப்புறம் என்ன ஆச்சு”

”காலம் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்க அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிடுச்சு.. இப்ப கார்த்திக் மேல பிரியா அளவில்லாத அன்பு வச்சிருந்தா. இரண்டுபேரையும் ஒன்னா பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருந்தது. படிப்பு முடிஞ்சு வேல கிடைச்சதும் பெற்றோர் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணாங்க.
எப்பவுமே தேர்ட் இயர்ல வரும் கேம்பஸ் இண்டர்வியு அந்த வருஷம் ஃபைனல் இயர்லதான் நடந்தது. ஃபர்ஸ்ட் ரவுண்டல பிரியாவும் நானும் ஒரே கம்பெனில செலக்ட் ஆயிட்டோம். என்ன ஆச்சுன்னு தெரியல கார்த்திக் மட்டும் செலக்ட் ஆகல. கடைசி வரை எந்த கம்பெனியும் அவனை செலக்ட் பண்ணல. நொந்து போய்ட்டான். என்னை விட அறிவாளி அவன். எப்படி செலக்ட் ஆகாமப் போனான்னு புரியல, அவனோட ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா இருக்கலாம்னு நாங்க பேசிக்கிட்டோம். ஆஃப் கேம்பஸ்ல ஏராளமான ஆஃபர்ஸ் இருக்குன்னு பிரியாவும் நானும் சமாதானம் செஞ்சோம்.

ஃபைனல் ரிசல்ட் வந்து ஆறுமாசத்துக்குள்ள நாங்க ரெண்டு பேரும் வேலையில ஜாயின் பண்ணிட்டோம். இதுக்குள்ள பிரியா வீட்டில அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிக்க, பிரியா தன்னோட காதல் விவகாரத்தை வீட்டில சொல்ல பிரச்சனை ஆரம்பமாயிடுச்சு. ரெண்டு பேரும் வீட்டை எதிர்த்துக்கிட்டு கலயாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கு ஃப்ரண்ட்ஸ் நாங்கல்லாம் ஹெல்ப் பண்ணோம். தனக்கு வேலையில்லையேன்னு கவலப்பட ஆரம்பிச்சதால பிரியா எங்க கம்பெனியிலேயே ரெகமண்ட் பண்ணி அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தா, ஆனா சம்பளம் அவள விடக் குறைவு. அங்க அடிக்கடி அவன் எஃபிஷியன்சிய பிரியாவோட கம்பேர் பண்ணி பேசினாங்க. அவள் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லன்னு வெளிப்படையாவே சொல்ல ஆரம்பிச்சாங்க. அது அவனுக்கு உறுத்தலா இருக்க சொல்லாம கொள்ளாம வேலைய விட்டுட்டான்”

”அடப்பாவமே!” பரிதாபப் பட்டாள் சசி

“அடுத்தடுத்து நடந்தத கேட்டா நீ பரிதாபப் படமாட்ட”

" ஆம்பளைங்களோட மனநிலை அப்படித்தான் இருக்கும்னு வேலய விட்டதை பிரியா பெரிசா எடுத்துக்கல. அவனுக்கு ஆறுதலாவே இருந்தா. வேற வேலைக்கு முயற்சி பண்ணினான் ஆனா எதுவும் அவனுக்கு செட் ஆகல. தன்னோட தகுதிக்கு குறைவான சேலரின்னு கிடைச்ச ஆஃபரையெல்லாம் வேணான்னு சொல்லிட்டான். போகப் போக சான்ஸ் கம்மியாயிகிட்டே போச்சு. அவன் வீட்டில இருந்து பிரியாவை டூ வீலர்ல கொண்டுவந்து விடறதும் திரும்ப அழைச்சிட்டுப் போறது மட்டுமே அவன் வேலையா இருந்தது. மத்த நேரங்கள்ல வீட்டில தனியாத்தான் இருந்தான். அவன் நடத்தையில மாற்றம் இருந்தாலும் முதல்ல அவ்வளவா தெரியல. எப்போதாவது பார்ட்டிகள் மட்டும் குடிக்கிற பழக்கம் இருந்தது. இப்போ அவன் அடிக்கடி குடிக்கிறான்னு வருத்தப்பட்டாள் பிரியா”

“சே! கேக்கவே கஷ்டமா இருக்கே. அது சரி உங்களுக்கு அந்தப் பழக்கம் இப்ப இல்லன்னு நினைக்கிறேன்” சசி தன்னோட கவலையை வெளிப்படுத்தினாள்

”முன்னாடியும் எனக்கு இல்ல” என்று நான் முறைக்க, ”நம்பிட்டேன், மேல சொல்லு” என்றாள் சசி

“ஒரு நாள் ஆஃபீஸ்ல பிரியாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. பிரியாவை கூட்டிட்டுப் போக அவனை வரச் சொல்லலாம்னு ஃபோன் பண்ணா எடுக்கவே இல்லை. அவ்வளோ போதையில் இருந்திருக்கான். நான் அவளைக் கொண்டு போய் வீட்டுல விட்டேன். உள்ளே இருந்த அவனுக்கு அடவைஸ் பண்ணேன். அவனோ என்னையும் பிரியாவையும் தப்பா பேசினான்”

“ என்னால நம்பவே முடியல. என்ன இவன் இவ்வளவு தரம் கெட்டவனா மாறிட்டான். இவன் காதலையா நாம் புனிதம்னு நினச்சு பிரியாகிட்ட சப்போட் பண்ணோம்னு முதல்முறையா கில்டியா ஃபீல் பண்ணேன்.”

நான் வருந்துவதைப் பார்த்ததும் சசி ”உன் மேல என்ன தப்பு இருக்கு. நீ சொன்னதாலதான் அவ கார்த்திக் காதல ஏத்துகிட்டான்னு நீ நினைக்கற. நீ சொல்றத மட்டும் கேட்டு முடிவு எடுத்த பொண்ணா பிரியா இருந்திருக்க மாட்டான்னுதான் நான் நினைக்கிறேன். அவ சொந்தமாதான் முடிவு பண்ணியிருப்பா. கார்த்திக் அப்ப நல்லவனா இருந்திருப்பான்னுதான் தோனுது” என்றாள்

“இல்ல சசி, மனசு நெருடலாவே இருக்கு. பிரியா சொல்ற ஒவ்வொன்னும் அதிர்ச்சியாவே இருந்தது. ஒரு முறை அவன் சிகரெட் பிடிக்கும்போது நெருப்பு பிரியா மேல பட்டுவிட்டது பதறிப்போய் மன்னிப்பு கேட்டானாம். ஆனா அடிக்கடி இந்த மாதிரி நடக்கறப்பதான் தெரிஞ்சது, அதஅவன் வேணும்னே செஞ்சிருக்கான்னு. நாளுக்கு நாள் அவனால ஏகப்பட்ட தொல்லை பிரியாவுக்கு. அவ பேர் சொல்லி பல பேரிடம் கடன் வாங்கிட்டு திரும்பக் கொடுக்காததால் கடன் காரங்க வீட்டு வாசல்ல வந்து தகராறு செஞ்சது இன்னொரு கதை. பிரியாவுக்கு தெரியாமல் அவனது ஏ.டி.எம் கார்டை எடுத்து சென்று அடிக்கடிபணம் எடுத்திருக்கிறான். அப்புறம் கார்டை மறைத்து வைக்க ஏகப்பட்ட சண்டை. ”எங்க அப்பா அம்மாவை பகைச்சிக்கிட்டு உன்னைப் போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு. அவங்க எனக்கு சீர் செனத்தியோட நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. இப்ப நான் உங்கிட்ட பிச்சை எடுக்க வேண்டி இருக்குன்னு வார்த்தையாலேயே சாகடிச்சானாம்”

“படிச்சவன் இப்படிக்கூட நடந்துக்குவானா?” ஆரம்பத்தில் நான் சொல்வதை சாதாரணமாகக் கேட்டுக் கொண்டு வந்த சசி இப்போது சீரியசானாள்.
நான் தொடர்ந்தேன்.

”ஃபேஸ் புக்ல பிரியா அவ்வளவு ஆக்டிவா இல்லன்னாலும் எப்பவாவது ஒன்னு ரெண்டு போஸ்ட் போடுவா. ஃப்ரெண்ட் லிஸ்ட்ல ஒருத்தன் அடிக்கடி இன்பாக்ஸ்ல வந்து வக்கரத் தொல்லை கொடுத்துக்கிட்டிருந்தானாம். எவ்வளவுதான் அன்ஃபிரண்ட் பண்ணாலும் வெவ்வேறு விதமா வந்து டார்ச்சர் செய்ய, அவ கார்த்திக் கிட்ட சொல்லி சைபர் கிரைமில் புகார் கொடுக்கலாம்னு சொன்னா. அவனோ வேண்டாம் விட்டுடு சொல்லியிருக்கான். பரவாயில்லையே கோவப்படாம பெருந்தன்மையா இருக்கானேன்னு ஆச்சர்யமா இருந்தது பிரியாவுக்கு. யதேச்சையா ஒருநாள் லாக் அவுட் செய்யாத ஃபேஸ்புக் அக்கவுண்டை கார்த்திக் மொபைலில் பார்த்தப்பதான் ஃபேக் ஐடி இல இருந்து தொந்தரவு கொடுத்தவன் கார்த்திக்தான் என்ற உண்மை தெரிஞ்சது“

“என்ன அநியாயங்க. அவளுக்கு எப்படி இருந்திருக்கும்?. அதை பிரியா கேக்கலையா எப்படி சகிச்சிக்கிட்டா?” சக பெண்ணின் வேதனை சசிக்கு புரிந்தது

“கேட்கத்தான் செஞ்சா. அவன் அழுது கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்க, வழக்கம்போல ஏமாந்து போனா. ஒருமுறை உடம்பு சரியில்லன்னு ஒரு வாரம் லீவில இருந்தப்ப அவளுக்கு கம்பெனியில் இருந்து ஆன்சைட்டுக்கு யூ.எஸ் போக வில்லிங்னஸ் கேட்டு பிரியாவுக்கு மெயில் அனுப்பியிருந்தாங்க. பிரியா நாட் வில்லிங்னு ரிப்ளை அனுப்பிட்டா. லீவ் முடிஞ்சி ஆஃபீஸ் வந்ததும் ஏன் இந்த ஆஃப்ரை அக்செப்ட் பண்ணலன்னு நான் கேட்க, எனக்கு தெரியாதே! நான் எதுவும் அப்படி அனுப்பலயேன்னு சொல்ல,அப்பதான் தெரிஞ்சது. அவளுக்கு பதிலா கார்த்திக்தான் அவ மெயில்ல இருந்து ரிப்ளை பண்ணியிருக்கான்னு. என்னோட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. பிரியாவோட முகத்தை என்னால பாக்கவே முடியல. நல்ல சான்ஸ் வந்ததும் நான் வேற கம்பெனிக்கு மாறிட்டேன். அதுக்கப்புறம் எப்பவாவது பேசுவா இல்லன்னா வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்புவா. சில நேரங்கள்ல மெயில் அனுப்புவா. கடைசியா நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடறதுக்காக அவளுக்கு ஃபோன் பண்ணேன். அப்ப இருந்த சூழ்நிலையில அவ நம்ம கல்யாணத்துக்கும் வரமுடியாதுன்னு சொல்லிட்டு அப்புறம் அவ சொன்னதத்தான் என்னால ஜீரணிக்கவே முடியல.

“ஒரு பொண்ணு எவ்வளதான் கஷ்டத்தை தாங்கறது ”

“ஆமாம் சசி. அவ குடி இருந்த வீட்டின் ஓனரின் மூனு வயது குட்டிப் பெண் வீட்டுக்கு வந்து விளையாடிக் கிட்டிருப்பாளாம். கார்த்திக் அந்தக் குழந்தையைப் பார்த்ததும் குழந்தையோடு குழந்தையா மாறி கொஞ்சி விளையாடுவானாம், அங்கிள்,அங்கிள்னு குழந்தை அவனுடன் ஒட்டிக்கிட்டாளாம். அது அவன் மன அழுத்தத்துக்கு ஆறுதலா இருக்குன்னு பிரியா நினைச்சா.
கார்த்திக்கைப் பார்த்தாலே ஓடி வந்து தன்னை தூக்கச் சொல்லும் குழந்தை, ஒரு நாள் அவன் அருகில் வரவே பயந்து ஓடியது. அவனோட குடிப் பழக்கமும் சிகரெட் நாற்றமும் காரணமா இருக்கும்னு பிரியா நினைச்சா.. ஒரு நாள் அவன் இல்லாத நேரத்தில் வந்த குழந்தையிடம், “ஏன் கார்த்திக் அங்கிள பார்த்து பயப்படற. அவர் அடிச்சாரா? ன்னு கேட்க, சொல்லத் தெரியாமல் குழந்தை சொன்னதைக் கேட்டதும் கார்த்திக்கின் வக்கிர புத்தி புரிஞ்சி போச்சு, இதுவரை இல்லாத பெரிய ஷாக்கா இருந்தது அவளுக்கு ரொம்பக் கோபப் பட்டு சண்டை போட்டா. அவனோ அதெல்லாம் இல்லன்னு சாதிச்சான். விஷயம் பெரிதாகுமுன் அடுத்த நாளே வீட்டை காலி செய்து விட்டாள்.”

“ அவ்வளவு மோசமானவரா உன் ஃப்ரண்டு?”

“என்னாலயும் நம்பவே முடியல சசி. அவனை என் ஃபிரண்டுன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.. பிரியாவோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணமா இருந்தேன்னு நினைக்கும்போது என் மேலயே எனக்கு வெறுப்பு வருது. ஆனால் பிரியா ஒருமுறைகூட என்மேல தப்பு சொல்லல, அவ என்ன திட்டி இருந்தாக் கூட ஆறுதலா இருந்திருக்கும்.
இனிமே அவன்கூட வாழறதில அர்த்தம் இல்லன்னு கடைசியா அவ எடுத்த முடிவுதான் விவாகரத்து. அதுக்கு அவன் லேசில ஒத்துக்கல.இனிமே திருந்திடறேன்னு கெஞ்சினான். ஆனா அவ ரொம்ப உறுதியா இருந்தா. பணம் கொடுக்கறேன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டானாம்’. கேஸ் நடந்து கிட்டிருந்தது. அதுக்கப்புறம் அவ முன்ன மாதிரி காண்டேக்டல இல்ல.
அதுக்கப்புறம் இப்பதான் இந்த மெயில் பண்ணி இருக்கா.

சசி அந்த மெயிலை முழுதாக இப்போது படித்தாள்

ரமேஷ்,
விட்டு விடுதலையாகிவிட்டேன். இப்போது தீர்ப்பு வந்து விட்டது. சட்டப்படி பிரிவு உறுதி செய்யப்பட்ட இந்த நாள்தான், என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். என்னைப் பற்றி எப்போதாவது கவலைப்படுவது நீ மட்டும்தான் என நினைக்கிறேன். நீ எதற்கும் காரணமில்லை. விதி சிலரது வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி சிரிக்கிறது. இன்னும் சில நாட்களில் நான் அமெரிக்கா செல்ல இருக்கிறேன். இது தகவலுக்காகத்தான்.

நட்புடன்
பிரியா
லேப்டாப்பில் மெயில் வாசகங்களை படித்த சசியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

சில வினாடிகள் அமைதியாக இருந்த ரமேஷ் ரிப்ளை டைப் செய்ய ஆரம்பித்தான் ரமேஷ்

பிரியா,

’என்னை மன்னித்து விடு’ என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தை தெரியவில்லை, இப்படி ஒரு அரக்கனாக கார்த்திக் இருப்பான் என்று என்னால் அறியமுடியாமல் போனதை நினைத்து வருந்துகிறேன். சங்கடத்துடனும் இனியாவது உன்வாழ்வில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் கூறுகிறேன்; உன் துயரங்களைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
பிரிந்த நாள் வாழ்த்துகள்”.
இப்படிக்கு
-ரமேஷ்-